தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளே கள் தடைக்கு காரணம்'
தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளே கள் தடைக்கு காரணம்'
ADDED : பிப் 19, 2025 06:40 PM

பல்லடம்:''தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகள்தான் கள்ளுக்கான தடை நீடிப்பதற்குக் காரணம்'' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி குற்றம்சாட்டினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், அவர் கூறியதாவது:
தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் 'கள்'ளுக்கு தடை இல்லை. கேரளாவில் கள் இறக்கி, பதப்படுத்தி அரசே விற்கிறது. இதன் வாயிலாக கேரள அரசுக்கு, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பனை, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம், வருவாய் போன்றவை உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் இருந்தும், கள்ளுக்கு தடை உள்ளது. தென்னிந்தியாவிலேயே அதிகளவு தென்னை மரங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான். இருந்தும், இங்குள்ள மரம் ஏறும் தொழிலாளர்கள் பலர் அண்டை மாநிலங்களுக்குச் சென்று பணி புரியும் அவலம் உள்ளது.
வைட்டமின், புரோட்டீன் நிறைந்த ஊட்டச்சத்து பானமான கள்ளை, மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வைத்துள்ளதே தவறானது.
இதர மாநிலங்களில் அரசியல்வாதிகள், அரசியல் மட்டுமே செய்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான், அரசியல்வாதிகள் மது ஆலைகளை நடத்துகின்றனர். குறிப்பாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இதில் பிரதானமாக இருப்பதாலேயே கள்ளுக்கான தடையை நீக்க மறுக்கின்றனர். தவறான புரிதலை வைத்துக்கொண்டு 'கள்'ளுக்கு தடை விதித்துள்ளனர். இதை ஒரு சதி திட்டமாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே, கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, கள் விடுதலை மாநாடு, வரும் 24ல் பல்லடத்தில் நடக்க உள்ளது. இதில், தமிழக 'கள்' இயக்க தலைவர் நல்லசாமி உட்பட, பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

