கோடை மழை செய்த பேருதவியால் நெருக்கடியில் தப்பியது மின் வாரியம்
கோடை மழை செய்த பேருதவியால் நெருக்கடியில் தப்பியது மின் வாரியம்
UPDATED : மே 12, 2025 06:43 AM
ADDED : மே 12, 2025 06:41 AM

சென்னை : கோடை காலத்தில் மின் தேவை, 22,000 மெகாவாட்டை எட்டும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து இம்மாதம் முதல் வாரம் வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. இதனால், கோடை மின் தேவையை பூர்த்தி செய்யும் நெருக்கடியில் இருந்து மின் வாரியம் தப்பித்துள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட் என்றளவில் உள்ளது. கோடை காலத்தில் வீடு, அலுவலகங்களில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால், மின் தேவையும் மிகவும் அதிகரிக்கிறது. அதன்படி, 2024 மே 2ம் தேதி, 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. அதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
இந்தாண்டு மார்ச்சில் வெயில் கடுமையாக இருந்தது. மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்தாண்டு கோடை காலத்தில் மின் தேவை, 22,000 மெகா வாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய, கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் யூனிட், 8 - 9 ரூபாய்க்கு வாங்க, தனியார் நிறுவனங்களுடன், மின் வாரியம் ஒப்பந்தம் செய்தது.
கடந்த மாதத்தில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், மின் தேவை, 19,000 - 20,000 மெகா வாட்டாக இருந்தது. அம்மாத இறுதியில் துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்தது. கடந்த வாரத்தில், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால், தினசரி மின் தேவை, 17,000 -- 18,000 மெகாவாட் என்றளவில் குறைந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோடை காலத்தில் ஏப்ரலில் தான் மின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக, ஏப்., மூன்றாவது வாரத்தில் இருந்து மே முதல் வாரம் வரை, மின் தேவை மிகவும் அதிகரிக்கும். அதை பூர்த்தி செய்ய, மின்சார சந்தைகளில் அதிகளவில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.
கடந்த ஏப்., இறுதி முதல் மே முதல் வாரம் வரையான நாட்களில், தினசரி மின் தேவை, 22,000 மெகா வாட்டாக அதிகரிக்கும் எதிர்பார்க்கப்பட்டது. சில மாவட்டங்களில் பெய்த கோடை மழையால், இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இனி அதிகரிக்கவும் வாய்ப்பில்லை. அப்படியே அதிகரித்தாலும், காற்றாலை மின்சாரம் கிடைத்து விடும் என்பதால், மின் தேவையை பூர்த்தி செய்ய சிரமம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.