பூங்கா சுற்றுச்சுவரை இடித்து அட்டகாசம் செய்த யானைகள்
பூங்கா சுற்றுச்சுவரை இடித்து அட்டகாசம் செய்த யானைகள்
ADDED : ஜன 22, 2024 06:38 AM

புன்செய்புளியம்பட்டி : ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையை ஒட்டி, 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா, வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், யானைகள் அவ்வழியாக கடந்து செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு இரண்டு யானைகள், வனப்பகுதியில் இருந்து வெளியேறி பண்ணாரி சாலை வந்து, பவானிசாகர் பூங்காவை முற்றுகையிட்டன.
சிறிது நேரத்தில் பூங்காவின் சுற்றுச்சுவர், கேட்டை இடித்து சேதப்படுத்தின. பூங்கா ஊழியர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வருவதற்குள், மீண்டும், புங்கார் கிராம பகுதிக்கு சென்ற காட்டு யானைகளை, பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளால், பயிர்கள் சேதமாகின்றன.
'வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள் ஆழமாக இல்லை. அட்டகாசம் செய்து வரும் யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்' என்றனர்.