மரண பயம் கண்ணில் தெரிகிறது: நயினார் நாகேந்திரன் ஆவேசம்
மரண பயம் கண்ணில் தெரிகிறது: நயினார் நாகேந்திரன் ஆவேசம்
ADDED : ஏப் 14, 2025 05:43 AM

சென்னை : 'பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியால், முதல்வர் கண்ணில் மரண பயம் தெரிகிறது. முதல்வரே பதற்றம் வேண்டாம்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நம்மை பார்த்து பொருந்தாக் கூட்டணி என்கின்றனராம், சில தி.மு.க., ஏஜன்டுகள். ஆம், இது தி.மு.க.,வுக்கு பொருந்தாக் கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணி தான், மக்களை சுரண்டி கொழுக்கும் ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது.
இந்த கூட்டணி தான், தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாக கொண்ட, ஒரு கேடுகெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது. இந்த கூட்டணி தான், மக்களோடு மக்களாக நின்று, முதல்வரின் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது.
இந்த உண்மை தெரிந்திருப்பதால், முதல்வரின் கண்ணில் மரண பயம் தெரிகிறது போலும். முதல்வரே பதற்றம் வேண்டாம். இன்னும் ஓராண்டு காலமிருக்கிறது; அதுவரை ஆடுங்கள். ஆனால், மக்கள் வாயிலாக, மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பை, யாராலும் மாற்ற முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

