திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்குகளில் அரசிடம் பதில் கோரும் உயர் நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்குகளில் அரசிடம் பதில் கோரும் உயர் நீதிமன்றம்
ADDED : பிப் 11, 2025 05:40 AM

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்குகளில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
'திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு, தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற அனைத்துப் பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை' என, ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலர், மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி, கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர்.
'தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்' என, பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு, 'எவ்வித பிரச்னை, பாகுபாடின்றி மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட அரசு விரும்புகிறது' என தெரிவித்தது.
'அறநிலையத்துறை கமிஷனர், டி.ஜி.பி., மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், திருப்பரங்குன்றம் கோவில் துணை கமிஷனர் ஆகியோர், மார்ச் 3ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.