30, 31ம் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
30, 31ம் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 05, 2024 10:45 PM
சென்னை:சாட்சியம் அளிக்க, வரும் 30, 31ம் தேதிகளில், மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராகும்படி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, வீடியோ வெளியிட்ட டில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், 'பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் போது, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
'அதனால், நேரில் ஆஜராக இயலாது. என் வீட்டில் சாட்சியம் பதிவு செய்ய, அட்வகேட் கமிஷனரை நியமிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து, ஒரு மாதத்தில் சாட்சியங்களை பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.
இதை எதிர்த்து, மேத்யூ சாமுவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மனுவை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மேத்யூ சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகினர். உயர் நீதிமன்றத்தில் சிறப்பான பாதுகாப்பு இருப்பதால், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக பழனிசாமிக்கு அறிவுறுத்தும்படி, அவரது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ''மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராவதாக, பழனிசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் விடுமுறை, சட்டசபை நிகழ்ச்சிகளை கருதி, ஆஜராகும் தேதியை நிர்ணயிக்கலாம்,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, வரும் 30, 31ம் தேதிகளில், மாஸ்டர் கோர்ட்டில் பழனிசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.