ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த பிரச்னை; கிராமங்களில் விசாரணை
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த பிரச்னை; கிராமங்களில் விசாரணை
ADDED : பிப் 12, 2024 11:39 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைரோடு அருகே தண்டவாளத்தில் சுண்ணாம்பு கற்களை வைத்தது யார் என்பது குறித்து அப்பகுதி கிராமங்களில் போலீசார் விசாரித்தனர்.
சென்னை தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கொடை ரோடு காமலாபுரம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் வரிசையாக சுண்ணாம்பு கல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி கற்களை அப்புறப்படுத்தி ரயிலை ஓட்டி சென்றார். திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் சென்று விசாரித்தார். நேற்று காலை இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.ஐ.,மாரியப்பன், தனிப்பிரிவு போலீசார் மணிகண்டன், காமராஜ், ராஜா உள்ளிட்டோர் அப்பகுதி கிராமங்களில் விசாரித்தனர். அருகில் உள்ள சுக்குலாபுரம், இ.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் யாரேனும் கற்களை வைத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.