பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு; மாற்றுத்திறனாளியை மணந்தவருக்கு குவியும் வாழ்த்து!
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு; மாற்றுத்திறனாளியை மணந்தவருக்கு குவியும் வாழ்த்து!
ADDED : பிப் 04, 2025 09:56 PM

அரியலுார்: பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணை மணந்தவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டான் அருகே சீனிவாசபுரத்தை சேர்ந்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் சத்யா,27, வை கடலுார் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த மதிஒளி, 41, திருமணம் செய்து கொண்டார்.
மணமகன் மதி ஒளி கூறுகையில்,
நான் ஸ்ரீமுஷ்ணத்தில் பாத்திரக்கடையில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு தாய், தந்தை இல்லை. தனியாக வாழ்ந்து வந்த எனக்கு சத்யாவின் வாழ்க்கை நிலை குறித்து உறவினர் மூலம் தெரியவந்தது. திருமணம் செய்வது குறித்து நான் வேலை செய்யும் கடையின் உரிமையாளர் முத்துராமலிங்கத்திடம் தெரிவித்தேன்.
அதை தொடர்ந்து கடையின் உரிமையாளர் முத்துராமலிங்கம், சத்யாவின் வீட்டிற்கு சென்று திருமணத்த பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்தார். அதன்படி, பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது என்றார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
மதி ஒளி பெயருக்கு தக்கபடி எண்ணமும் செயலும் கொண்டவர் என்று உறவினர்கள் பாராட்டினர்.
மணமக்கள் இருவரும், அரசு உதவி வழங்கினால் எங்கள் வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் என்றனர்.

