தமிழகத்தில் பெருங்கழுகுகள் எண்ணிக்கை 157 ஆக உயர்வு: வனத்துறை தகவல்
தமிழகத்தில் பெருங்கழுகுகள் எண்ணிக்கை 157 ஆக உயர்வு: வனத்துறை தகவல்
UPDATED : ஏப் 05, 2025 05:46 AM
ADDED : ஏப் 05, 2025 02:27 AM

சென்னை:'தமிழகத்தில், 'பாரூ' கழுகுகள் எனப்படும், பெருங்கழுகுகள் கழுகுகள் எண்ணிக்கை, 142ல் இருந்து, 157 ஆக உயர்ந்துள்ளது' என, வனத்துறை வெளியிட்ட கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில், வெண்முதுகு, நீண்ட மூக்கு, செம்முகம் என, மூன்று வகையான பெருங்கழுகுகள் பிரதானமாகக் காணப்படுகின்றன. கடந்த, 30 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இவை அழிவின் விளிம்பில் உள்ள பறவையாக பட்டியலிடப்பட்டன.
கணக்கெடுப்பு
இவற்றை பாதுகாக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பிட்ட சில மருந்துகளை தடை செய்தல், வாழிடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், கேரளா, கர்நாடக மாநிலங்களுடன் இணைந்து, கழுகுகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகளை, தமிழக வனத்துறை மேற்கொண்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில், நேற்று கணக்கெடுப்பு அறிக்கையை, வனத்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். முதல் பிரதியை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு பெற்றுக்கொண்டார்.
கணக்கெடுப்பு குறித்து, வனத்துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில், பிப்., 27, 28ம் தேதிகளில், ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு நடந்தது. மூன்று மாநிலங்களிலும், 106 இடங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 390 பெருங்கழுகுகள் இருப்பது தெரியவந்தது.
கடந்த ஆண்டு கணக்கெடுப்பில், 320 கழுகுகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
60 கூடுகள்
தமிழகத்தில், 33 இடங்களில் நடந்த கணக்கெடுப்பில், 157 பெருங்கழுகுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டன. கடந்து ஆண்டு இதன் எண்ணிக்கை, 140 ஆக இருந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், வெண் முதுகு கழுகுகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்கு எட்டு இடங்களில், 60 கூடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

