'அர்ச்சனை தட்டில் போடும் காசு அர்ச்சகருக்கு சொந்தமில்லை!'
'அர்ச்சனை தட்டில் போடும் காசு அர்ச்சகருக்கு சொந்தமில்லை!'
ADDED : அக் 29, 2024 11:37 PM
சென்னை:'பக்தர்கள் தட்டில் போடும் காசை, அர்ச்சகர் வீட்டுக்கு கொண்டு போக உரிமை கிடையாது. அது, கோவிலுக்கே சொந்தம்' என, அறநிலைய துறை தெரிவித்துள்ளது.
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ், 30க்கும் மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் அதில் ஒன்று.
அங்கு அர்ச்சனை தட்டில் பக்தர்கள் வைக்கும் பணத்தை, எடுத்து உண்டியலில் போடும்படி, அர்ச்சகர்களை ஊழியர்கள் நிர்பந்தம் செய்வதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதற்கு அறநிலைய துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன் விபரம்:
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் அர்ச்சகர் மோகன் நிரந்தர ஊழியர். அவருடைய ஊதியம் 38,907 ரூபாய்.
சிறப்பூதியம், ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் மற்றும் அனைத்து படிகளும் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு நிகரான அனைத்து பணப்பயன்களும் அவருக்கு கிடைக்கும்.
எனவே, பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கைகளை அர்ச்சகர், சொந்த உபயோகத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உரிமையில்லை. இதனால், கோவில் உண்டி யலில் அந்த காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

