ADDED : பிப் 16, 2025 02:11 AM
'இரட்டை கொலைக்கு முன்விரோதமே காரணம்'
தமிழக காவல்துறையின் அறிக்கை:
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வருபவர் மூவேந்தன், 24. இவருக்கும், அதே தெருவில் வசித்து வரும் தினேஷ், 28, என்பவருக்கும், வாய் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
தினேஷ், அவரது நண்பர்களான ஹரிஷ், 25, ஹரிசக்தி, 20, அஜய், 19, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூவேந்தன், அவரது சகோதரர் தங்கதுரை, 28, உறவினர் ராஜ்குமார், 34, ஆகியோர், மதுபோதையில் தினேஷை கத்தியால் தாக்க முயன்றனர்.
இதை தடுக்க வந்த ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகியோரை கத்தியால் குத்தினர். இதில், ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குற்றவாளிகள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே தெருவில் வசிக்கும் இரு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, இக்கொலை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், சில ஊடகங்கள், மது விற்பனை தொடர்பாக கொலை நடந்திருப்பதாக, உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு வருகின்றன. இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

