சில்லரை விலையில் கறிக்கோழி ரூ.360; அரசு தலையிடாததால் எகிறியது விலை
சில்லரை விலையில் கறிக்கோழி ரூ.360; அரசு தலையிடாததால் எகிறியது விலை
UPDATED : ஜன 21, 2026 01:16 PM
ADDED : ஜன 21, 2026 07:08 AM

-நமது நிருபர்-
கோழி வளர்ப்பு கூலி உயர்வு பிரச்னையில், 'அரசு தலையிட முடியாது' என, கூறி முத்தரப்பு கூட்டம் நடத்த மறுத்ததால், கறிக்கோழி விலை தாறுமாறாக எகிறி உள்ளது. தமிழகத்தில் உள்ள கறிக்கோழி நிறுவனங்கள், கோழிக்குஞ்சு, மருந்து, தீவனம் வழங்கி, 38 முதல், 45 நாட்களில், 2 கிலோவுக்கு மேல் கோழியாக வளர்த்து தர, பண்ணைகளுக்கு வழங்குகின்றன.
கறிக்கோழி வளர்ப்பு கூலியாக கிலோவுக்கு, 6.50 ரூபாய் தருவதை, 20 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் எனவும் அதிகாரிகள், கோழி நிறுவனம், கோழி வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் ஆகியோரை கொண்ட முத்தரப்பு குழு அமைத்து, ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு, பிற குறைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன.
இதையடுத்து, இன்று, சென்னையில் கால்நடைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், முத்தரப்பு பேச்சு நடத்த ஏற்பாடாகி இருந்த நிலையில், 'பிரச்னையை இரு தரப்பும் பேசி முடித்துக் கொள்ள வேண்டும்; அரசு தலையிட முடியாது' என கால்நடை துறை செயலர் சுப்பையன் அறிவித்துள்ளார். இப்போராட்டத்தால், கறிக்கோழி சில்லரையில் கிலோ 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது, தற்போது 360 ரூபாயாக உயர்ந்துள்ளது.
போராட்டம்
கோழி வளர்ப்பு விவசாயிகள் கூறியதாவது: இறைச்சி கோழி நிறுவனங்களிடம், பெரும்பாலான விவசாய சங்கங்கள், 'நன்கொடை' பெறுகின்றன. இதனால், கூலி உயர்வு தொடர்பாக கண்டுகொள்வதில்லை. ஆனால், கடந்த, 1ம் தேதி முதல், கோழி வளர்ப்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கறிக்கோழி உற்பத்தி எண்ணிக்கை சரிந்துள்ளதாக கூறி, அதன் விலை உயர்ந்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தகவல் தொழில்நுட்ப மாநில செயலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''நான்கு ஆண்டுகளுக்கு முன், கோழிக்குஞ்சு விலை, 20 ரூபாயில் இருந்த நிலையில், கறிக்கோழி நிறுவனம், தற்போது, 40 ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டது. ''விவசாயிகள் வளர்க்கும் கோழிகளுக்கு, மின் கட்டணம், தேங்காய் நார் செலவினங்கள் அதிகரித்தபோதும், கோழி வளர்ப்பு செலவு தொகையை, உற்பத்தியாளர்களுக்கு அதிகரிக்கவில்லை.
ஒருங்கிணைப்பு
''முத்தரப்பு கூட்டம் நடத்தி, விலை நிர்ணயித்து அரசிதழில் வெளியிட்டால், ஆண்டுதோறும் விலை உயர்வு கிடைக்கும்,'' என்றார். கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி(பி.சி.சி.,) செயலர் சுவாதி கண்ணன் கூறுகையில், ''விவசாயிகளுக்கு கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தவில்லை எனக் கூறுவது பொய். தற்போது கிலோவுக்கு, 10 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. பிரச்னை சுமுகமாக முடியும்,'' என்றார்.

