புதிதாக திறந்த பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை காரை பெயர்ந்தது
புதிதாக திறந்த பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை காரை பெயர்ந்தது
ADDED : பிப் 18, 2024 11:52 PM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் அரசு துறைகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மாநகராட்சியின் பஸ் ஸ்டாண்ட் கட்டட முதல்மாடி மேற்கூரையில், திறப்பு விழாவின்போது காரை பெயர்ந்து விழுந்தது.
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 85 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. கடந்த, 2018ல் துவங்கிய கட்டுமான பணி, ஐந்தாண்டுகளுக்கு பின் சமீபத்தில் நிறைவுற்றது.
இக்கட்டுமானத்திற்கான உள்ளூர் திட்டக் குழும அனுமதி பெறப்படவில்லை. தீயணைப்பு, நெடுஞ்சாலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்து ஆணையர், சுகாதாரம் உள்ளிட்ட அரசு துறைகளின் அனுமதியும் பெறப்படவில்லை.
இதற்கிடையில், திருநெல்வேலியில் தி.மு.க., நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவிற்கு அமைச்சர் உதயநிதி வந்ததையொட்டி, நேற்று பல்வேறு அரசு திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் உதயநிதி பங்கேற்றார். திறப்பு விழாவின் போது முதல்மாடி கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள், கான்ட்ராக்டரை விட்டு அவசரமாக இடிந்த பகுதியை சரி செய்தனர்.
பஸ் ஸ்டாண்ட் கட்டடம் முன்பு இருந்ததை விட, போதிய பஸ்கள் நிற்கும் அளவில் இல்லை எனவும் ஒரு வணிக வளாகம் போல நுாற்றுக்கணக்கான கடைகளை கட்டி நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புலம்பினர்.

