கடலில் தங்க கட்டிகள் தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்தது
கடலில் தங்க கட்டிகள் தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்தது
ADDED : பிப் 26, 2024 12:09 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் நேற்று மூன்றாவது நாளாக இந்திய கடலோர காவல் படை வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் , கடத்தல்காரர்கள் வீசிய 10 கிலோ தங்க கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இலங்கையில் இருந்து பிப்.23ல் மன்னார் வளைகுடா கடல் வழியாக பைபர் கிளாஸ் படகில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை கடற்கரைக்கு 10 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.
இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை கடலில் வீசிவிட்டு தப்ப முயன்றனர். இதில் இருவர் சிக்கினர். ஒருவர் கடலில் குதித்து தப்பினார்.
கைதான இருவரின் தகவலில் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகளை 2 நாள்களாக தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாம் நாளான நேற்றும் இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலுக்குள் மூழ்கி சங்கு எடுக்கும் மீனவர்கள் 3 பேர் என 10 பேர்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்றும் மாலை வரை கிடைக்கவில்லை.

