ADDED : அக் 04, 2024 07:53 PM
சென்னை:தர்மபுரியில் பா.ம.க., நடத்திய கடையடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
வறண்டு கிடக்கும் தர்மபுரி மாவட்டத்தின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கான, தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட அரை நாள் கடையடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது.
போராட்டத்தை வெற்றி பெறச் செய்த வணிகர்கள், பொது மக்கள், சமூகநல அமைப்புகள் உள்ளிட்டோருக்கு நன்றி. கடையடைப்புப் போராட்டத்தை வெற்றியாக்க கடுமையாக உழைத்த பா.ம.க., மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.
தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை மதித்து, காவிரி உபரிநீர் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.