ADDED : அக் 28, 2024 07:00 PM

சென்னை: வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ள தமிழக அரசு, நிவாரண நிதியை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு அதிகளவு வெப்ப அலை வீசியது. கோடை காலத்தையும் தாண்டி வெப்பம் நீடித்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர். வயதானவர்கள் பலர் மருத்துவமனையை நாடினர்.
இந்நிலையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெப்ப அலையால் மரணம் அடைந்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்தி கொள்ளலாம். வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்குவதற்கு மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

