நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது: சீமான்
நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது: சீமான்
ADDED : அக் 27, 2025 01:17 PM

மதுரை: நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழ் சமூகம் எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை. கல்வி வியாபாரமாக மாறியதால் கல்வியில் அரசியல் கற்பிக்கப்படவில்லை. கலையை போற்றலாம், கலைஞர்களை கொண்டாடலாம். நடித்தாலே போதும் நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது, தகுதி வந்துவிடுகிறது என்று நாட்டு மக்கள் கருதுவார்களானால், அது ரொம்ப கொடுமையான போக்காக மாறிவிடும்.
நிலைப்பாடு
அதனை வருங்கால தலை முறையினர், அறிவார்ந்த சமூகமாக உருவாகும் என நினைக்கும் பொழுது தற்போதைய நிலை கண்டு ஒரு நடுக்கம் இருக்கிறது. ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை?
நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு? நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு, என்கிற கோட்பாடு, நிலைப்பாடு உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்த தமிழ் சமூகம் இச்செயல்களை ஏற்கிறதா? இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சினிமா உள்ளது.
திரை கவர்ச்சி
ஆனால் எந்த ஒரு மாநிலத்தில் நிகழாத விபத்து தமிழகத்தில் நடக்கிறது ஏன்?. திரை கவர்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் தமிழ் இனம் விழிப்புற்று ஏழ வேண்டும். அரசியல் என்பது வாழ்வியல், முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் பெரும் சிக்கல் ஆகிவிடும். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவது விஜயின் விருப்பம். அதில் நாம் கருத்து சொல்ல முடியாது.
இவ்வாறு சீமான் கூறினார்.

