'பா.ம.க.,வுக்குள் புகுந்த நோய் கிருமி': பொருளாளர் மீது பொதுச்செயலர் காட்டம்
'பா.ம.க.,வுக்குள் புகுந்த நோய் கிருமி': பொருளாளர் மீது பொதுச்செயலர் காட்டம்
ADDED : ஏப் 15, 2025 07:14 AM

சென்னை : 'பா.ம.க.,வுக்குள் புகுந்த நோய்க்கிருமி' என, அன்புமணி ஆதரவாளரும், கட்சியின் பொருளாளருமான திலகபாமாவை, ராமதாஸ் ஆதரவு பொதுச்செயலர் வடிவேல் ராவணன் விமர்சித்துள்ளார்.
கடந்த 10ல் கட்சி நிர்வாகிகள் சிலரை, தைலாபுரம் தோட்டத்துக்கு வரவழைத்து பேசிய பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, அவரை கட்சியின் செயல் தலைவராக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து, அன்புமணிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார், கட்சியின் பொருளாளர் திலகபாமா. கடந்த லோக்சபா தேர்தலில், பா.ம.க., சார்பில் வேட்பாளராக்கப்பட்டவர் திலகபாமா.
அன்புமணிக்கு ஆதரவாக பதிவிட்ட திலகபாமா, 'ராமதாஸின் செயல் ஜனநாயகப் படுகொலை' என விமர்சித்திருந்தார். இதனால், திலகபாமா மீது கடும் கோபம் அடைந்த ராமதாஸ், அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்தார். பெண் என்பதால், அவரை சங்கடத்துக்கு உள்ளாக்கி விட்டதாக விமர்சனம் எழும் என்பதால், அம்முடிவில் இருந்து பின்வாங்கினார்.
இருந்தபோதும், அவர் கட்சியில் நீடிக்க விரும்பாத ராமதாஸ், தன் கருத்தை கட்சி நிர்வாகிகளிடம் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார்.
இதையடுத்து, திலகபாமாவை கட்சியை விட்டு போகச் சொல்லி, கடுமையான வார்த்தைகளோடு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன். ராமதாஸின் எண்ணத்தை அறிக்கையில் அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் வடிவேல் ராவணன்.
இதற்கிடையில், இந்த அறிக்கை தொடர்பாக திலகபாமா, அன்புமணியிடம் பேச, 'அவசரப்பட்டு எந்த முடிவையும் யாருக்காகவும் எடுக்க வேண்டாம்; எதையும் அமைதியாக எதிர்கொள்வோம்' என அன்புமணி கூறியிருப்பதாக பா.ம.க., வட்டாரங்கள் கூறின.
வடிவேல் ராவணன் அறிக்கை:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் எடுத்த முடிவை ஜனநாயகப் படுகொலை என, கட்சியின் பொருளாளர் திலகபாமா சிறுபிள்ளைத்தனமாக குற்றம் சாட்டிஇருக்கிறார்.
அவர் நேற்று கட்சிக்கு வந்தவர். பா.ம.க.,வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். அவர், பாட்டாளி மக்களின் தோழர் அல்ல; மேட்டுக்குடியினம்.
பல மாவட்டங்களில், பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொல்லும் நோய் அவர். பா.ம.க.,வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி.
ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று, நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி, ராமதாஸை வசைபாடிய திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.