ADDED : ஜன 23, 2024 11:14 PM
சென்னை மயிலாப்பூரில் நடந்த விழாவில், சாய்நாத் எழுதியுள்ள ஆங்கில நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பான, 'இறுதி நாயகர்கள்' நுாலை வெளியிட்டு, தி.மு.க.வின் துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:
வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயம். யாரும் தான் விரும்பும் கடவுளை வழிபடலாம்; விரும்பும் மதத்தை பின்பற்றலாம். எந்த கடவுளை வணங்குவது, அந்த கடவுளின் உருவம் என்ன என்பதை, ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அந்த உரிமை அனைவருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை யாரும் திணிக்கக்கூடாது.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. ஆனால், அத்திட்டங்கள் மக்கள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 100 நாள் வேலை உள்ளிட்ட மக்களுக்கு போய்ச் சேரும் திட்டங்களை அழித்து, மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவாத விஷயங்களை முன்வைத்து, அதை இந்த தேசமாக, தேசியமாக, மக்களின் அடையாளமாக மாற்ற நினைக்கின்றனர்.
இதைத்தான் பெருமையாகவும் பேசுகின்றனர்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.

