தமிழகத்தில் 157 தாலுகாக்களில் நில ஆவண வரைவாளர் இல்லை
தமிழகத்தில் 157 தாலுகாக்களில் நில ஆவண வரைவாளர் இல்லை
ADDED : ஜன 11, 2025 10:27 PM
திருப்பூர்:தமிழகத்தில் உள்ள 312 தாலுகாக்களில், புதிதாக உருவானவற்றில் நில ஆவண வரைவாளர் பணியிடம் ஏற்படுத்தப்படவில்லை. அந்த வகையில், புதிதாக உருவான, 157 தாலுகாக்களில், நில ஆவண வரைவாளர் பணியிடம் இல்லை.
பட்டா உட்பிரிவு செய்வது, புதிய புல வரைபடம் தயாரிப்பது, நிலத்தை அளவீடு செய்து வரைபடத்துடன் வழங்குவது என, நில ஆவண வரைவாளர் பணி அதிகம். நில ஆவண விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யவும், கணக்குகள் மாறுதல் செய்யவும், நில ஆவண வரைவாளர் பங்களிப்பு அவசியம்.
மாநில அளவில், 157 தாலுகாக்களில், நில ஆவண வரைவாளர் பணியிடம் இல்லை; இப்பணிகளை, மற்ற அலுவலர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். புதிய பணியிடத்தை தோற்றுவிக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு மாநில நில அளவை வரைவாளர் ஒன்றிணைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
நில ஆவண வரைவாளர் பணியிடம் இல்லாததால், வரைவாளர் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. நில ஆவண பராமரிப்பு பாதிக்கிறது. அனைத்து தாலுகாவிலும், நில ஆவண வரைவாளர் பணியிடத்தை ஏற்படுத்தி, பணி நியமனம் செய்ய வேண்டும். இது உட்பட நில அளவை பிரிவில் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்துள்ளோம். பட்ஜெட் கூட்டத்தில், இதுதொடர்பான அறிவிப்பு வரும் என காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

