இ.பி.எஸ்.,க்கு வேறு வேலை இல்லை; அமைச்சர் சேகர்பாபு பேட்டி
இ.பி.எஸ்.,க்கு வேறு வேலை இல்லை; அமைச்சர் சேகர்பாபு பேட்டி
ADDED : நவ 28, 2024 12:11 PM

சென்னை: 'இ.பி.எஸ்.,க்கு வேறு வேலை இல்லை என்பதால், அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
செங்கல்பட்டில் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. இதனை கண்டுகொள்ளாமல் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுகிறார் என இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில்: பிறந்த நாள் அறிவிப்பு வெளியிட்ட போது உதயநிதி ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
பேனர்கள் வைக்க வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். ஏழை, எளிய மக்களுக்கு, வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கல்வி உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை, திருநங்கைகளுக்கு உதவி தொகை, கருணை இல்லங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
இன்று 21 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தோம். இதனை எப்படி ஆடம்பரம் என்று எடுத்து கொள்ள முடியும். பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருந்தால் யார் என்ன செய்ய முடியும். மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பது அனைத்துமே மஞ்சளாகதான் தெரியும். தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு வேறு வேலை இல்லை.
அதனால் இப்படி அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். சில தினங்களுக்கு முன்பு, ராமதாஸ் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வேறு வேலை என்பதால் அறிக்கை விடுகிறார் என பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.