UPDATED : மார் 07, 2024 02:16 AM
ADDED : மார் 06, 2024 11:20 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., வுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சில் இழுபறி எதுவும் இல்லை. ஒருபோதும் இழுபறி இல்லாமல், சுமுகமான தீர்வு கிடைக்கும்.
மாநில கட்சிகளுடனான பேச்சு வார்த்தையே இன்னும் முடிவடையவில்லை. காங்கிரஸ் தேசியக் கட்சி என்பதால், அகில இந்தியத் தலைவர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் முடிவு செய்ய முடியும். இனிப்பான செய்திகள் வரும்.
காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும்.
காங்கிரஸ் பேரியக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் குறைத்து மதிப்பிடமாட்டார். எங்கள் உயரம் புரிந்து, எங்களுக்கு தேவையான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வார்.
தமிழக மக்களின் ஆன்மாவாகவும், இந்தியா கூட்டணியின் மனசாட்சியாகவும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
மோடி, கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களை ஒரு முறை கூட பார்க்கவில்லை. இப்போது வாக்குக்காக மட்டும் வந்து பார்க்கிறார்.
பகல் கனவு காணும் மோடியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பொய்யும், புரட்டுமாக பேசும் மோடி, அராஜகத்தின் உச்சக்கட்டமாக தி.மு.க., காங்கிரசை அழிப்பேன் எனக் கூறுகிறார். அவரது கட்சி இத்தேர்தலில் இருக்கிறதா என பார்ப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

