கோவை விமான நிலையத்தில் நிற்க கூட இடமில்லை: பல்வேறு நகரங்களுக்கு புதிய சேவைகளும், கட்டமைப்பும் அவசியம்
கோவை விமான நிலையத்தில் நிற்க கூட இடமில்லை: பல்வேறு நகரங்களுக்கு புதிய சேவைகளும், கட்டமைப்பும் அவசியம்
UPDATED : மே 03, 2025 12:39 AM
ADDED : மே 02, 2025 08:41 PM

கோவை:கோவையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையை துவங்கவும், விமான நிலையத்தில் பயணியருக்கான வசதிகளை அதிகரிக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், மும்பை, டில்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கட்டா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
கோவையிலிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், விமான நிலையத்தில் பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விமான நிலைய ஆணைய தகவல்களின்படி, கடந்த நிதியாண்டில் அதிகளவாக, கோவையில் இருந்து, 32.53 லட்சம் பயணியர் பயணித்துள்ளனர். இது முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், 12 சதவீதம் அதிகம்.
பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் இருந்து, வெளியூர் செல்லும் பயணியருக்கு, விமான நிலையத்தின் உள்ளே நிற்கக்கூட இடம் இல்லாத நிலை தொடர்கிறது.
முதியவர்கள், பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர். உடைமைகளை சோதிக்க, போதிய ஸ்கேனர் கருவிகள் இல்லாததால், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை துணைத்தலைவர் நடராஜன் கூறியதாவது:
கோவை விமான நிலையத்தில், குடிநீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும். டிஜி யாத்ரா சேவைகளுக்கு குறைவான நபர்களே உள்ளனர். உணவு தேவை பற்றாக்குறையாக உள்ளது. பயணியர் அமர, போதுமான எண்ணிக்கையில் இருக்கைகள் இல்லை. அதிக கூட்டமாக இருந்தால் நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
துபாய், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விமான சேவை வேண்டும். உள்நாட்டை பொறுத்தவரை, கொல்கட்டா, திருவனந்தபுரம் நகரங்களுக்கு விமான சேவை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொங்கு குளோபல் போரம் இயக்குநர் சதீஷ் கூறுகையில், ''விமான நிலையத்தில் மறுசீரமைப்பை துரிதப்படுத்த வேண்டும். டில்லி, சென்னை, புனே நகரங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். துபாய், தோகா, கொழும்பு, பாங்காக், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கான சேவையை துவங்க வேண்டும். பிரத்யேக சரக்கு போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ''விரிவாக்க பணிகள் நிறைவடைய நான்கு ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கும். அதுவரை காத்திருக்க முடியாது.
''விமானத்துக்கு செல்ல ஒரு நுழைவாயில் மட்டுமே திறக்கப்படுகிறது. நிற்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. அங்கு உள்ள மற்றொரு நுழைவாயிலையும் பயன்படுத்தலாம்.
''பாதுகாப்பு சோதனைகளுக்கு, இரு கவுன்டர்கள் மட்டுமே உள்ளன. இதனால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. சில நாட்களில், விமான நிலையத்துக்கு உள்ளேயே நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல், உடைமைகளை பரிசோதிக்க கூடுதல் கருவிகள் வேண்டும்,'' என்றார்.