ரூ.30 லட்சம் கட்டணம் கேட்பதால் காற்றாலை புதுப்பிக்க ஆர்வமில்லை
ரூ.30 லட்சம் கட்டணம் கேட்பதால் காற்றாலை புதுப்பிக்க ஆர்வமில்லை
ADDED : அக் 22, 2024 02:26 AM

சென்னை : ஒரு மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய் வளர்ச்சி கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட காரணங்களால், காற்றாலைகளை புதுப்பிக்க, உரிமையாளர்களிடம் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இதனால், இதுவரை, 25 மெகா வாட்டிற்கு மட்டுமே காற்றாலையை புதுப்பிக்க, மின் வாரியத்திடம் விண்ணப்பம் வந்து உள்ளது.
கடும் எதிர்ப்பு
தமிழகத்தில், 1986 முதல் காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்பட்டு செயல்படுகின்றன. கடந்த ஜூன், 30 நிலவரப்படி மாநிலத்தில், 10,790 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு காற்றாலை யும், 600 கிலோ வாட் வரையிலான திறனில் அமைக்கப்பட்டது. தற்போது, ஒரு காற்றாலை, 2 மெகா வாட் திறனில் அமைக்கப்படுகிறது.
இதனால், பழைய காற்றாலைக்கு பதில் புதிதாக அமைக்கவும், திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஆயுளை நீட்டிக்கவும், 'தமிழக காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024 ஐ அரசு சமீபத்தில் வெளியிட்டது.
அந்த கொள்கையின்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலைக்கு பதிலாக, புதிதாக அமைக்கலாம்.
காற்றாலையை புதுப்பிக்க வளர்ச்சி கட்டணமாக, 1 மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய், மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
இதற்கு, காற்றாலை மின் நிலையம் அமைத்தவர்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.
இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலான, 3,000 மெகா வாட் அளவுக்கான காற்றாலைகள் புதுப்பிக்க வேண்டிய நிலையில், இதுவரை, 25 மெகா வாட்டிற்கு தான் மின் வாரியத்திடம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஆயுட்காலம்
இதுகுறித்து, காற்றாலைகளை அதிகம் அமைத்துள்ள தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
நடைமுறைக்கு ஏற்றதாக கொள்கையில் முடிவுகள் எடுக்கப்படவில்லை. காற்றாலையை ஏற்கனவே நிறுவியபோது, வளர்ச்சி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த காற்றலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் இன்று வரை, மின் வழித்தடத்தில் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த சூழலில், காற்றாலை புதுப்பித்தாலோ, ஆயுள் நீட்டிப்பு செய்தாலோ, மீண்டும் மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய் செலுத்த சொல்வது ஏற்புடையதல்ல.
காற்றாலையை புதுப்பித்தல் என்பது சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கை அல்ல. இது, உற்பத்தியாளர்களின் தனிப்பட்ட முடிவு.
காற்றாலையை புதுப்பித்தால், அந்த காற்றாலைகளில் இருந்து ஏற்கனவே வழங்கியதுடன், கூடுதலாக, 25 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
காற்றாலை ஆயுட் காலம் என்பது, இதுவரை சட்டப்பூர்வமாக நிர்ணயம் செய்யப்படவில்லை. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் வாங்குவதற்கு மட்டுமே, 20 - 25 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
புதிய கொள்கையின்படி, 20 ஆண்டு முடிந்த உடன் காற்றாலையை மாற்ற வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்பது அதிர்ச்சி தரக்கூடியது.
இவ்வாறு அவர் கூறினார்.