வி.சி., கட்சியில் 234 மா.செ.,க்கள் ஓரிரு நாளில் திருமா அறிவிக்கிறார்
வி.சி., கட்சியில் 234 மா.செ.,க்கள் ஓரிரு நாளில் திருமா அறிவிக்கிறார்
ADDED : நவ 27, 2025 01:29 AM

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில், சட்டசபை தொகுதி வாரியாக, 234 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட்ட வி.சி., நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
வரும், 2026 சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலம் என, 15க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், அதில், ஐந்து பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறது.
இதற்காக கட்சியை வலுப்படுத்தும் வகையில், 234 தொகுதிகளையும் கட்சி ரீதியாக மாவட்டங்களாக்கி மாவட்ட செயலர்களை நியமிக்க, அக்கட்சி தலைவர் திருமாவளவன், முடிவு செய்துள்ளார்.
இதற்காக, 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் இருந்து, மாவட்ட செயலர்கள் பட்டியலை திருமாவளவன் இறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட, 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:
கட்சிக்கு சட்டசபை தொகுதி வாரியாக, மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, 22,000 பேர் விண்ணப்பித்த நிலையில், பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.
ஏற்கனவே மாவட்ட செயலர்களாக உள்ள, சிலரின் பதவி தவிர்க்க முடியாத காரணத்தால் மாற்றப்படுகிறது. அவர்களுக்கு வேறு பதவி ஒதுக்கப்படும். வரும், 2026 தேர்தலில், வி.சி., தவிர்க்க முடியாத கட்சி என்பதை உறுதிப்படுத்த, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

