ADDED : பிப் 24, 2026 04:42 AM

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, இரு பிரிவினர் இடையே வன்முறையை துாண்டும் விதமாக பேசியது தொடர்பான வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில், கடந்த 2014 ஜன., 8ல் நடந்த பொது கூட்டத்தில், இரு பிரிவினர் இடையே வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, திருமாவளவன் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை, புதுச்சேரி நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், திருமாவளவன் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, 'குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; அரசின் முன் அனுமதி பெறவில்லை' எனக்கூறி, புதுச்சேரி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, திருமாவளவனை வழக்கில் இருந்து விடுவித்து உத்தர விட்டார்.

