திருவள்ளுவர் தினம்: பிரதமர், கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
திருவள்ளுவர் தினம்: பிரதமர், கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
UPDATED : ஜன 16, 2024 12:45 PM
ADDED : ஜன 16, 2024 10:05 AM

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 'சனாதன பாரம்பரியத்தின் துறவி திருவள்ளுவர்' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ரவி உள்ளிட்டோர் திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்.
கவர்னர் ரவி
திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழகத்தில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழகத்தில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!.
அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர்
திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள். விவேகம் நிறைந்த கவிஞர் மற்றும் தத்துவஞானியான திருவள்ளுவர், மரபு மற்றும் மனித வாழ்வில் தெய்வீகத்தை தூண்டுவதோடு, பல யுகங்களுக்கு நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் தூண்டுகிறார். திருவள்ளுவர் அவர்கள் எழுதிய திருக்குறள் உலக நலனுக்கானது. இன்றைய பாரதத்தின் கலாச்சார ஞானத்தின் சான்றாகவும் இது கருதப்படுகிறது. திருக்குறள் நமக்கு வழிகாட்டும் ஒளியாக என்றும் தொடரும்.