திருவாரூர் இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் சுப்பிரமணியன் பதில்
திருவாரூர் இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் சுப்பிரமணியன் பதில்
ADDED : நவ 03, 2024 12:57 AM

சென்னை: ''ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் தமிழகம் வந்த, திருவாரூர் இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு இல்லை. சிக்கன் பாக்ஸ் பாதிப்பு உள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
இரு தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து, 27 வயது இளைஞர் விமானத்தில் திருச்சி வந்தார். காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், திருச்சி விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
அவரின் உடலில் சில கொப்புளங்கள் இருந்த தால், திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்; அங்கிருந்து தப்பினார்.
அவர் நலன் சார்ந்தும், அவரால் பிறருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தும், போலீசார் உதவியுடன் திருவாரூர் வலங்கைமான் சென்று, அவரை அழைத்து வந்து, திருச்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
அவர் உடலில் இருந்த கொப்புளங்களின் மாதிரி எடுத்து, சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும், 'சிக்கன் பாக்ஸ்' சின்னம்மை பாதிப்பு இருப்பதும் தெரிந்தது.
மறு ஆய்வுக்கு, புனே தேசிய வைராலஜி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி உள்ளோம். இன்று அல்லது நாளை பரிசோதனை முடிவு வரும்.
குரங்கம்மை நோய் உலகம் முழுதும் பரவி வரும் நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, 'ஸ்கிரீனிங்' செய்யும் பணி தொடர்ச்சியாக நடக்கிறது.
காய்ச்சல் பாதிப்பு இருந்தால், குரங்கம்மை பாதிப்பு குறித்து பரிசோதனை செய்கிறோம். பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள நகரங்களில், அரசு மருத்துவமனைகளில், குரங்கம்மை பாதிப்புக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு நடந்த தீபாவளி பட்டாசு விபத்துகளில், 20 சதவீதத்திற்கும் குறைவான நபர்களுக்கே காயங்கள் ஏற்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை அதிவேகமாக துவங்கியது.
பெரிய அளவில் பாதிப்பு இல்லாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் 1,000 மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்து, 1,296 முகாம்கள் நடத்தப்பட்டன.