ADDED : மார் 07, 2024 03:52 AM

த.யாபேத் தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
காங்., - எம்.பி., ராகுல், 2023ல் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்' என்று வாக்களித்தார். இப்போது, 'இட ஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு நீக்கப்படும்' என்று ராகுல் கூறியுள்ளார். அதாவது, இனி மொத்தமும் இட ஒதுக்கீடு தான் என்று தான் இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப் பாலும், இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவதாலும் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்து விடும் என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது. புதிய பொருளாதார கொள்கையின் அடிநாதமே, தனியாருக்கு ஊக்கம் மற்றும் அரசின் சுமையை குறைப்பது என்பது தான். இதை நாம் ஏற்று, 33 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மத்திய, மாநில அரசுகள் நிரந்தர பணியாளர்களை எடுக்காமல், பெரும்பாலும் ஒப்பந்த முறையிலான பணியாளர்களையே தேர்வு செய்கின்றன. ஏனெனில், நிரந்தர பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டியுள்ளது.
எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்று கூறுகின்றனர். தேர்தலில் வெல்வதற்காக, பல்வேறு வாக்குறுதிகளையும் வாரி விடுகின்றனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின், 'நிதி நிலை சரியில்லை' எனக் கூறி, வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுகின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பாலும், இடஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கத்தாலும் மக்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் விளையப் போவதில்லை. மக்கள் மத்தியில் வீண் குழப்பங்களை மட்டுமே உருவாக்க முடியும்.மணிப்பூரில் இட ஒதுக்கீட்டு பிரச்னையால் தான், அந்த மாநிலம் இன்று வரை அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
'உண்ணாவிரத போராட்டத்தில் என் உயிர் போனால், மராத்தா சமூகத்தினர் மஹாராஷ்டிராவை எரித்து விடுவர்' என சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே எச்சரித்துள்ளார். இதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பாலும், இட ஒதுக்கீட்டாலும் கிடைக்கக்கூடிய விளைவுகள்.
எனவே, ராகுல் போன்ற தலைவர்கள், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்காத விஷயங்களை பேசாமல் இருப்பதே நன்று. வி.பி.சிங்கின் மண்டல் கமிஷன் வாயிலாக மிகப்பெரிய பலனை அனுபவித்தது பா.ஜ.,தான் என்பதை ராகுல் மறந்து விடாமல் செயல்பட்டால் கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது.

