UPDATED : மே 24, 2024 01:45 PM
ADDED : மே 23, 2024 11:58 PM

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடியை, 24 மணி நேரத்திற்குள் கொலை செய்யப் போவதாக, சென்னை என்.ஐ.ஏ., அலுவலகத்துக்கு போன் மூலம் மிரட்டல் வந்தது. ஹிந்தியில் பேசிய மர்ம நபர் மத்திய பிரதேசத்தில் இருப்பதை கண்டுபிடித்த போலீஸ், அந்த மாநில டி.ஜி.பி.,க்கு 'அலெர்ட்' அனுப்பியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலகம் உள்ளது. அதன் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலர் ஸ்ரீநாத் பணியில் இருந்தார். பிற்பகலில் 62667 82606 என்ற மொபைல் போன் எண்ணில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டார்.
அதிகாரிகளுக்கு தகவல்
ஹிந்தியில் பேசிய அவர், 'வட மாநிலங்களில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடியை, இன்னும், 24 மணி நேரத்திற்குள் கொன்று விடுவேன்' என, மிரட்டல் விடுத்து, தொடர்பை துண்டித்து விட்டார். ஸ்ரீநாத் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சென்னை தெற்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துஉள்ளனர்.
போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோடுக்கு தகவல் தெரிந்ததும், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டார். ஹிந்தியில் பேசிய நபர், ம.பி.,யில் இருந்து கொலை மிரட்டல் விடுத்தார் என்பதை சைபர் கிரைம் போலீஸ் கண்டுபிடித்தது. ம.பி., போலீசுக்கு தகவல் அனுப்பினர். சென்னை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, 'இ -மெயில்' அனுப்பினர்.
ஆயுத பயிற்சி
பிரதமர் பெயருக்கு விடுத்த மிரட்டல் என்பதால் உள்துறை அமைச்சகம் சீரியசாக எடுத்துக் கொண்டு, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. உளவு அமைப்பான ஐ.பி., உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்பினர் ம.பி., தமிழகம் என பிரிந்து உடனடியாக விசாரிக்க துவங்கினர். இரு மாநிலங்களிலும் சமீபத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலும் புலனாய்வு நடப்பதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 2022ல் கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கார் குண்டு வெடித்தது. கோவிலை தகர்க்க முயன்ற, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், சத்தியமங்கலம் காட்டில் ஆயுதப் பயிற்சி மற்றும் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதும், சென்னை, கோவையில் உள்ள அரபிக் கல்லுாரியை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கான தளமாக பயன்படுத்தியதும் அம்பலமானது.
விசாரணை
கடந்த மார்ச் 1ல், பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. அதையும் என்.ஐ.ஏ., விசாரித்து, மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அப்துல் மதீன் அகமது தாஹா, முாசவிர் ஹூசைன் ஷாகிப் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களுக்கு சென்னை, கோவையில் தொடர்பு இருப்பது தெரிந்து, அந்த விசாரணை விரிவடைந்துள்ளது. கடந்த திங்களன்று, ஆமதாபாதில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஐந்து பேர் சிக்கினர். இலங்கையைச் சேர்ந்த அவர்கள், சென்னை வழியாக குஜராத் சென்று பா.ஜ., தலைவர்களை கொல்ல திட்டமிட்டு இருந்ததாக அம்மாநில டி.ஜி.பி., தெரிவித்தார். இவ்வாறான சூழலில் பிரதமருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் மத்திய அரசு வட்டாரங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன.
- நமது நிருபர் -