ADDED : ஏப் 16, 2025 08:38 PM
மஹிபால்பூர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலி பாஸ்போர்ட்டில் கனடாவுக்கு அனுப்ப முயன்றதாக 3 ஏஜன்ட்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 10ம் தேதி, கமல்ஜீத் சிங் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்த ஒருவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கனடா நாட்டின் டொராண்டோவிற்கு விமானத்தில் ஏற முயன்றார்.
குடியேற்ற சோதனைகளின்போது, பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் அந்த நபருடன் பொருந்தாததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். விசாரித்ததில், அவர், பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியைச் சேர்ந்த மன்பிரீத் சிங், 40, என்பது தெரிய வந்தது.
போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு பயணம் செய்ய 32 லட்ச ரூபாய் பேசி, 20 லட்ச ரூபாய் கொடுத்ததாக மன்பிரீத் ஒப்புக்கொண்டார்.
அவர் கொடுத்த தகவலின்படி, ஏஜன்ட்களான ரூபேந்திரர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் சவுத்ரி, 24, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விஷால் திமான், 27, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.