சரக்கு ஆட்டோ கவிழ்ந்து மதுராந்தகத்தில் மூவர் காயம்
சரக்கு ஆட்டோ கவிழ்ந்து மதுராந்தகத்தில் மூவர் காயம்
ADDED : பிப் 14, 2024 10:46 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் வடக்கு பைபாஸ் சாலையில், ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்துார் அடுத்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிமியோன், 39. இவர், ஒழுப்பாக்கம் பகுதியில் தங்கி, பழைய பேப்பர் கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று, கருங்குழியில் இருந்து ஒழுப்பாக்கத்திற்கு, லோடு ஏற்றி செல்ல பயன்படும் மூன்று சக்கர ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். இவருடன், ஒழுப்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார், 35, மற்றும் முருகன், 43, ஆகியோரும் வந்துள்ளனர்.
மதுராந்தகம் வடக்கு பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்ததில், மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, மதுராந்தகம் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

