ஓய்வு அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி: கேரளாவை சேர்ந்த மூவர் கைது
ஓய்வு அதிகாரியிடம் ரூ.6.58 கோடி மோசடி: கேரளாவை சேர்ந்த மூவர் கைது
ADDED : மே 25, 2025 12:33 AM

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியை ஏமாற்றி, 6.58 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கேரளாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி ஒருவர், அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயலியில் சேருமாறு வந்த 'வாட்ஸாப்' செய்தியை நம்பி, மோசடிக்காரர்கள் அனுப்பிய இணைப்பு வாயிலாக விண்ணப்பித்துள்ளார்.
பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து, 6.58 கோடி ரூபாயை, 'டிபாசிட்' செய்துள்ளார். பின்னர் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சென்னை 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் பீர் பாஷா தலைமையிலான சிறப்புக்குழு நடத்திய விசாரணையில், கேரளாவை சேர்ந்த மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றியது கண்டறியப்பட்டது.
அதன்படி, கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜித் ஆர் நாயர், 47, அப்துல் சாலு, 47, முகமது பர்விஸ், 44, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன், குற்ற செயல்களில் பயன்படுத்தப்பட்ட, மூன்று மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹவாலா பணமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி, 'கிரிப்டோ கரன்சி'யாக இந்தியாவுக்கு வரவைத்து, இக்கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டுஉள்ள அறிக்கை:
'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யு டியூப்' போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக, 'ஆன்லைன்' முதலீடு மோசடி, பகுதிநேர வேலை மோசடி விளம்பரங்கள் வாயிலாக பொதுமக்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற விளம்பரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்பு ஏற்பட்டால், உடனடியாக '1930' என்ற எண்ணிலும், cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.