'தியாகராயர், அம்மா அரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்காதீங்க'
'தியாகராயர், அம்மா அரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்காதீங்க'
ADDED : நவ 01, 2024 04:49 AM
சென்னை : 'சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் போன்றவற்றை, தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை, சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில், சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு.வி.க., நகர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டு திடல்களை, தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனாலும், மாநகராட்சியின் முடிவு முழுமையானதாக இல்லை.
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது தவிர்க்கப்பட்டால் மட்டும் போதாது. ஏற்கனவே, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட டென்னிஸ் திடல், பேட்மிண்டன் திடல் , ஸ்கேட்டிங் மைதானம், டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவையும், உடனே திரும்ப பெற வேண்டும்.
விளையாட்டு திடல்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை விட அதிர்ச்சியளிக்கும் செயல், தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் போன்றவை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது தான். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால், தியாகராயர் அரங்கத்தை, 24 மணி நேரம் பயன்படுத்துவதற்கான வாடகை, இப்போதுள்ள, 20 ஆயிரத்து, 650- ரூபாயிலிருந்து, 59 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அம்மா அரங்கத்தின் வாடகை, 3.40 லட்சத்திலிருந்து, 5.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். எளிய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அரங்குகளின் வாடகை, மும்மடங்கு அளவுக்கு உயர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தியாகராயர் அரங்கில், சில ஆயிரம் ரூபாய் செலவில், 3 மணி நேரத்திற்கான நுால் வெளியீடு உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை எளிய மனிதர்களாலும் நடத்தி விட முடியும்.
மாறாக, 59 ஆயிரம் ரூபாய் செலுத்தி தான் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடும். எனவே, சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் போன்றவற்றை, தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.