பைக்காரா ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
பைக்காரா ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : நவ 10, 2024 02:43 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து 19 கி.மீ., தொலைவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே அணை இருப்பதால் இயற்கை காட்சியை ரசித்தவாறு சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
அவ்வப்போது கரையோரம் வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வருவதால் விலங்குகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.
வார விடுமுறையை ஒட்டி நேற்று, ஊட்டியில் பகல் நேரங்களில் வெயில் தென்பட்டு இதமான காலநிலை நிலவியது. கேரளா, கர்நாடகா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிக அளவில் படகு சவாரி செய்ய பைக்காரா ஏரிக்கு வந்திருந்தனர்.
ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது.