குண்டளை அணையில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் ஆர்வம்
குண்டளை அணையில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : மார் 04, 2024 05:29 AM

மூணாறு : மூணாறு அருகில் உள்ள குண்டளை அணையில் இயக்கப்படும் பல்வேறு வகை படகுகளிலும், குறிப்பாக தேனிலவு தம்பதியினர் பயணிக்கும் காஷ்மீர் சிக்காரியா படகில் பயணிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கேரளமாநிலம் மூணாறு டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ. தொலைவில் குண்டளை அணை உள்ளது. அதனை கேரள மின்வாரியத்தினர் பராமரிக்கின்றனர்.
மின்வாரியத்தின் ஹைடல் சுற்றுலா சார்பில் அணையில் பெடல், துடுப்பு படகுகள், தேனிலவு தம்பதியினருக்கு என காஷ்மீர் சிக்காரியா படகு, கயாக்கிங், பரிசல் இயக்கப்படுகின்றன. அவற்றில் சுயமாக இயக்கும் தன்மை கொண்ட பெடல் படகுகளில் பயணிக்க பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
அதில் 30 நிமிடத்திற்கு இருவர் பயணிக்க ரூ.400, நான்கு பேர் பயணிக்க ரூ.600 கட்டணம் வசூலிக்கின்றனர்.
தற்போது அணை நிரம்பியுள்ள நிலையில் இயற்கை சூழலில் பயணிகள் படகு சவாரி செய்ய, குவிந்து வருகின்றனர். காஷ்மீர் சிக்காரியா தேனிலவு தம்பதி செல்லும் படகுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் உள்ளதால் அதில் செல்லவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

