இன்று தமிழர் வெற்றிக்கழக மாநாடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
இன்று தமிழர் வெற்றிக்கழக மாநாடு நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 26, 2024 07:17 PM
விக்கிரவாண்டி:தமிழக வெற்றிக்கழக மாநாட்டையொட்டி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் த.வெ.க., மாநில மாநாடு இன்று மாலை நடக்கிறது. மாநாட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவர் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அதையடுத்து, போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் மாநாட்டிற்கு வந்து செல்லும் வாகனங்கள் இடையூன்றி பயணிக்க இன்று பிற்பகல் 2:00 மணி முதல் போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
அதன்படி, மாநாட்டிற்கு வரும் பதிவு செய்துள்ள வாகனங்களைத் தவிர, சென்னையில் இருந்து திருச்சி மார்க்கம் செல்லும் பிற வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக விழுப்புரம் நோக்கிச் செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து கும்பகோணம் மார்க்கம் செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து, புதுச்சேரி - கடலுார், வடலுார் வழியாகவும்; இலகு ரக வாகனங்கள் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து திருவக்கரை, திருக்கனுார், மதகடிப்பட்டு வழியாக விழுப்புரம் நோக்கிச் செல்ல வேண்டும்.
திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாகவும், கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பண்ருட்டி, கடலுார், புதுச்சேரி, திண்டிவனம் வழியாக திருப்பி விடப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.