போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
UPDATED : பிப் 25, 2024 05:28 PM
ADDED : பிப் 25, 2024 03:58 PM

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் சிக்கியது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் தேடப்பட்டு வருகிறார்.
போதைப் பொருள்கள் நடமாட்டம்
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு
ஆகியோருடன் ஜாபர் சாதிக் இருக்கும் படங்களும், விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் முகமது சலீம் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு அண்ணாமலை கூறியிருப்பதாவது: ஜாபர் சாதிக் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், பா.ஜ., எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.
கடுமையான நடவடிக்கை
தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
தி.மு.க நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட புகாரில் ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

