பைக்கில் துப்பட்டா சிக்கி கர்ப்பிணி பலி; வளைகாப்பு நடக்க இருந்த நாளில் சோகம்
பைக்கில் துப்பட்டா சிக்கி கர்ப்பிணி பலி; வளைகாப்பு நடக்க இருந்த நாளில் சோகம்
ADDED : நவ 14, 2024 06:30 AM

சேலம்: வளைகாப்பு நடக்கவிருந்த நாளில், பைக்கில் துப்பட்டா சிக்கி, 7 மாத கர்ப்பிணி பலியானார். வளைகாப்புக்கு வந்த அவரது பெற்றோர், இறுதி சடங்கில் பங்கேற்று கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம், அஸ்தம்பட்டி, கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் தனுஷ், 21. அதே பகுதியில், டீ மாஸ்டராக பணிபுரிகிறார். இவர், பழநியில் உள்ள உறவினரின் பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்தபோது அதே பகுதியை சேர்ந்த காவ்யா, 20, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனுஷ், காவ்யாவை அழைத்துக்கொண்டு சேலம் வந்துவிட்டார். தற்போது காவ்யா, 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அவர் வளைகாப்பை, நேற்று நடத்துவது குறித்து, காவ்யாவின் தாயிடம் கூறினார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர், நேற்று முன்தினம் பழநியில் இருந்து சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அவர்கள், போன் செய்து காவ்யாவிடம் சேலம் வந்ததை தெரிவித்தனர். இதனால் நள்ளிரவு, 12:00 மணிக்கு கணவருடன் காவ்யா, பைக்கில் புது பஸ் ஸ்டாண்ட் புறப்பட்டார்.
சாரதா கல்லுாரி மேம்பாலம் இறங்கும் இடத்தில், அலறல் சத்தம் கேட்டு தனுஷ் திரும்பி பார்த்தார். அப்போது, காவ்யா பைக்கில் இருந்து கீழே விழுந்து கிடந்தார்.
பைக்கில் அவரது துப்பட்டா சிக்கி இருந்தது. அதிர்ச்சியடைந்த தனுஷ் கதறினார்.
காயமடைந்த காவியாவை, உடனே ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
காவ்யாவின் பெற்றோர், 'வளைகாப்புக்கு வந்த நிலையில் இறுதி சடங்கில் பங்கேற்கும்படி ஆகிவிட்டதே' என கதறி அழுதனர். அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

