ADDED : ஜூலை 16, 2025 12:16 AM
சென்னை:கடலூர் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கிராசிங்கில், கடந்த 8ம் தேதி, விழுப்புரம் - -மயிலாடுதுறை பயணிகள் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது மோதியது. இதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த லெவல் கிராசிங்கில், கேட் கீப்பராக பங்கஜ் சர்மா என்பவர் பணியில் இருந்தார். அவர் ரயில்வே கேட்டை மூடாததே, விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது.
இதையடுத்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவ்விபத்து குறித்து விசாரிக்க, தெற்கு ரயில்வே சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை முடிந்து, தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அறிக்கை அளித்துள்ளது.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரயில் வரும் நேரத்தில், பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை மூடாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. விசாரணை குழு பரிந்துரையை ஏற்று அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

