யானை வழித்தட பகுதியில் விதிகளை மீறி பணி நிலச்சரிவு அச்சத்தில் பழங்குடியின மக்கள்
யானை வழித்தட பகுதியில் விதிகளை மீறி பணி நிலச்சரிவு அச்சத்தில் பழங்குடியின மக்கள்
UPDATED : ஜன 04, 2025 06:49 AM
ADDED : ஜன 04, 2025 02:47 AM

குன்னுார்:கேரளா வயநாடு நிலச்சரிவு போல, குன்னுாரிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, பழங்குடியின மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே கடந்த, 2023ம் ஆண்டு மே மாதம் குரும்பாடி புதுக்காடு அருகே, தேசிய நெடுஞ்சாலையின் மேற்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் பொக்லைன் பயன்படுத்தி, விதிகளை மீறி மலையை குடைந்து, மரங்களை வெட்டி சாய்த்து, மண் சாலை அமைக்கப்பட்டது.
ஆய்வு செய்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், கிராம நிர்வாக உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்தனர்.
இந்நிலையில், குரும்பாடியின் மேல் பகுதியில் மலையை கரைக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால், மலையின் கீழ் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அச்சமடைந்து, மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
நிலச்சரிவு அபாயம்
எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், கடந்த சில நாட்களாக, விதிகளை மீறி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் கூறுகையில்,'' நாங்கள் வாழ்ந்து வரும் கிராமத்தின் மேல் பகுதியில் இத்தகைய விதிமீறிய பணிகள் நடக்கிறது.
விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படுவதாக கூறப்படுகிறது. மலை மீது கட்டுமானங்கள் வந்தால், நிலச்சரிவு ஏற்படும் பட்சத்தில், பழங்குடி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த பகுதியில் யானை வழித்தமாகவும் உள்ளது,'' என்றார்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,''குரும்பாடி பகுதியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.