"காசி தமிழ் சங்கமத்தை 2வது முறையாக நடத்திய பெருமை பிரதமருக்கே": எல்.முருகன் பேச்சு
"காசி தமிழ் சங்கமத்தை 2வது முறையாக நடத்திய பெருமை பிரதமருக்கே": எல்.முருகன் பேச்சு
UPDATED : ஜன 02, 2024 01:15 PM
ADDED : ஜன 02, 2024 01:06 PM
திருச்சி: 'காசி தமிழ் சங்கமத்தை 2வது முறையாக நடத்திய பெருமை பிரதமரையே சேரும்' என திருச்சியில் விமான முனைய திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

புண்ணிய பூமி
புதிய முனையம் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: புண்ணிய பூமி மற்றும் ஆன்மீக பூமியான திருச்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது பல்லாயிரக்கணக்கான திட்டங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார். இன்றும் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உள்ளார்.
காசிக்கும் - ராமேஸ்வரத்திற்கும், காசிக்கும்- தென்காசிக்கு இடையே உள்ள தொடர்பை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மேலும் வலுப்படுத்துகிறது. காசி தமிழ் சங்கமத்தை 2வது முறையாக நடத்திய பெருமை பிரதமரையே சேரும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். 2047ல் வல்லரசு நாடாக இந்தியாவை மாற்ற கங்கணம் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.

வளர்ச்சிக்கான பாதை
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: புதிய முனையம் திருச்சி மக்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு. கலாசாரத்தின் மையமாக திருச்சி திகழ்கிறது. இது விமான நிலையம் மட்டும் அல்ல. வளர்ச்சிக்கான பாதை.
விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான மையமாக தமிழகம் திகழ்கிறது. நெய்வேலி, வேலூரில் விரைவில் விமான சேவை துவங்கும். அடுத்த 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திருச்சி முனையம் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து துறையிலும் வளர்ச்சி
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் இதய பகுதியாக இருப்பது திருச்சி. புதிய முனையம் திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி. தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழகம். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளை செய்து தரும் முக்கிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை
'' மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும். சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை துவங்க வேண்டும்.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும். சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.
வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். '' கோரிக்கை அரசியல் முழக்கம் அல்ல. மக்களுக்குகானது'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., வினர் முழக்கம்
முதல்வர் ஸ்டாலின் பேசும் போது மோடி மோடி என பா.ஜ., வினர் முழக்கம் எழுப்பினர். ஸ்டாலின் பேசும் போது ஒன்றிய அரசு, இந்திய பிரதமர் என குறிப்பிட்ட போது பா.ஜ., முழக்கமிட்டனர். மோடி அமைதி காக்கும்படி சைகை காட்டியும் முழக்கம் தொடர்ந்தது.

