மாநில அளவில் விளையாட்டு போட்டி துாத்துக்குடி மண்டலம் சாம்பியன்
மாநில அளவில் விளையாட்டு போட்டி துாத்துக்குடி மண்டலம் சாம்பியன்
ADDED : பிப் 13, 2025 03:04 AM
சென்னை:சென்னை, பெரியமேடு, நேரு மைதானத்தில் நேற்று நடந்த, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், துாத்துக்குடி மண்டலம், மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறை சார்பில், தமிழகம் முழுதும் சிறப்பு இல்ல விடுதியில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியருக்கு, மாநில அளவில் விளையாட்டுப் போட்டி, கடந்த இரண்டு நாட்களாக, சென்னையில் நடந்தது. இதில், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், ராணிப்பேட்டை என, நான்கு மண்டலங்களாக, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற, 163 விடுதிகளைச் சேர்ந்த, 364 மாணவ - மாணவியர், மாநில அளவிலானப் போட்டியில் பங்கேற்றனர். சென்னை, நேரு மைதானத்தில் போட்டிகள் நடந்தது. மாநில அளவில், துாத்துக்குடி மண்டல விடுதி மாணவர்கள், ஓவர்-ஆல் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சிறந்த தனிநபர் ஜூனியர் மற்றும் சீனியர் ஆண் பிரிவில், சென்னை மாணவர் அபிஷேக் ராஜ், தஞ்சாவூர் மாணவர் பி. கிஷோர்; பெண்கள் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் தஞ்சாவூர் மாணவி ஆஷா, துாத்துக்குடி மாணவி பி. பிரியதர்ஷினி, ஆகியோர் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, துணை முதல்வர் உதயநிதி பரிசுகள் வழங்கினார்.

