வேட்பாளர்களை விஜய் மட்டுமே அறிவிப்பார்: குழப்பத்துக்கு தவெக முற்றுப்புள்ளி
வேட்பாளர்களை விஜய் மட்டுமே அறிவிப்பார்: குழப்பத்துக்கு தவெக முற்றுப்புள்ளி
ADDED : டிச 14, 2025 05:25 PM

சென்னை: கட்சியின் வேட்பாளர்களை விஜய் மட்டுமே அறிவிப்பார் என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தை நோக்கி நகர்ந்து வரும் நடிகர் விஜய்யின் தவெக, யாருடனும் இன்னமும் கூட்டணி வைக்கவில்லை. தனித்தே போட்டி என்று சூசகமாக அக்கட்சி அறிவித்துவிட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்று ஒரு தகவல் சமூக வலை தள பக்கங்களில் உலா வர ஆரம்பித்துள்ளது.
அதில் முத்தாய்ப்பாக, தவெக வேட்பாளர்கள் பட்டியலானது இன்று வெளியிடப்படுகிறது, திருச்செங்கோட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான அருண்ராஜ் போட்டியிடுவார் என்று தகவல்கள் பகிரப்பட்டன. இதுபற்றி தவெக முன்னணி நிர்வாகிகள் தரப்பிலும் விவாதிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டது.
இந் நிலையில், கட்சியின் வேட்பாளர்களை விஜய் மட்டுமே அறிவிப்பார் என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவின் விவரம் வருமாறு;
வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை.
தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவரால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார். அது வரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

