தவெக மாநாட்டு பேனர் வைக்கும்போது சோகம்: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
தவெக மாநாட்டு பேனர் வைக்கும்போது சோகம்: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
ADDED : ஆக 20, 2025 11:20 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டுக்கு பேனர் வைக்க முயன்ற போது கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
நடிகர் விஜயின் தவெக 2வது மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் ஆக. 21ம் தேதி நடக்கிறது. இதற்காக அங்கு 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு மேடை இருக்கைகள், மின் விளக்குகள், பந்தல் அலங்கார பணிகள் முழு வீச்சில நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து விஜய் ரசிகர்கள், தவெக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
அதே போன்று அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மாநாட்டை வரவேற்றும், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், பேனர்கள் வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும் வருகின்றனர்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல் குளத்தில் மாநாட்டுக்கு பேனர் வைக்கும் பணியில் தவெக தொண்டர்கள் இறங்கி உள்ளனர். அதற்காக தயார் செய்யப்பட்ட பேனர் ஒன்றை தவெகவினர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பேனர் வைக்க கம்பி ஒன்றை கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) என்பவர் எடுத்து வந்தார். எதிர்பாராத விதமாக கம்பி மீது மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே காளீஸ்வரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பேனர் வைக்க முயன்றபோது கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.