தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது; ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
ADDED : அக் 17, 2025 03:06 PM

சென்னை; நடிகர் விஜய்யின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த வக்கீல் செல்வகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது;
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியாகினர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகளை கூட்டம் கூட்டுவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் விதிகளுக்கு முரணானது.
அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று முமபை ஐகோர்ட் வழக்கு ஒன்றில் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அதிகாரம் அளித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் பெயரை சேர்க்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடியும் வரை அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ, பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி தரக்கூடாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிய தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பலியானவர்களுக்கு குறைந்தது தலா ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க விஜய்க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையின் போது, தவெக அங்கீரிக்கப்படாத கட்சி. எனவே அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்ப முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு குறிப்பிட்டுள்ள சில கோரிக்கைகள் சுப்ரீம்கோர்ட் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட இருக்கும் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்டது.