அனைத்து பிரச்னைகளிலும் விஜய் சும்மாவே தானே இருக்கார்; கேட்கிறார் நடிகை கஸ்தூரி
அனைத்து பிரச்னைகளிலும் விஜய் சும்மாவே தானே இருக்கார்; கேட்கிறார் நடிகை கஸ்தூரி
ADDED : ஜன 26, 2026 08:06 PM

காஞ்சிபுரம்: தப்பு நடந்தால் தட்டி கேட்பேன் என்று சொல்லும் விஜய், அனைத்து பிரச்னைகளிலும் சும்மாவே தானே இருக்கார் என்று பாஜ பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அவர் அளித்த பேட்டி;
விஜய் எப்போதும் மாநாட்டில் நல்லா பேசுகிறார். ஆனால் அதற்கு அப்புறம் பேசுவதே இல்லை. முக்கியமாக நேற்று அதிமுகவையும், தேசிய ஜனநாயக கூட்டணியையும் தாக்க ஆரம்பித்து உள்ளார். ஏற்கனவே பாஜவை கொள்கை எதிரி என்று பேசிக் கொண்டு இருந்தவர், நேற்றைக்கு மறைமுகமாக பெயர் சொல்லாமல் ஊழல் கட்சி என்று பேசி இருக்கிறார்.
ஊழலும், தவறும் கண் முன்னாடி நடந்தால் அதை தட்டிக்கேட்காமல் நான் சும்மா இருந்திருவேனா? என்று பேசியுள்ளார். அதற்கு பதில் அவர்தான் சொல்ல வேண்டும். ஒரு வருஷமாக எத்தனையோ போராட்டம் நடந்து இருக்கிறது. அதில் எந்த போராட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
ரோட்டில் நின்று தூய்மை பணியாளர்கள் போராடினார்கள், அங்கே அவர் வரவில்லை. திருப்பரங்குன்றம் தீபம் பிரச்னையானது அப்போதும் அவர் பேசவில்லை. கரூரில் ஒரு பிரச்னை நடந்தபோதும் கூட அவர் 4 நாள் கழித்து தான் பேசினார்.
அவர் படம் இன்று பிரச்னையில் இருக்கிறது, அதற்காக தமிழகத்தில் இன்று எல்லாரும் பேசுகிறார்கள். தலைவர்கள் பேசுகின்றனர், மக்கள் பேசுகின்றனர் ஆனால் அவர் பேசுவதே இல்லை. அப்போ ஒருவேளை அது தப்பு இல்லை என்று சொல்கிறாரா? சரியாக நடக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா?
தப்பு நடந்தால் தட்டிக்கேட்காமல் சும்மா இருப்பேனா என்று கேட்கிறவர் எல்லா விஷயத்திலும் சும்மாதானே இருக்கிறார். எப்போது அவர் பேச ஆரம்பிக்க போறாரு? ஹிந்தியை எந்த வகையிலும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்பவர்கள் யார் என்று பார்த்தோம் என்றால் பள்ளிக்கூடம் நடத்துபவர்கள்தான். முதலில் அவர்கள் அந்த பள்ளிகளில் அதை ஒழிக்கட்டுமே.
என் அடையாளம் தமிழ்,நான் ஹிந்தி திணிப்புக்கு முழு எதிரி. அதேபோல மொழி ஒன்று வரக்கூடாது என்று சொல்வதும் ஒருவகையான மொழி பயங்கரவாதம் தான்.
இவ்வாறு கஸ்தூரி பேட்டி அளித்தார்.

