லாரியில் பூக்களுடன் மறைத்து 3 கிலோ கஞ்சா கடத்தல்; மதுரையில் இருவர் கைது
லாரியில் பூக்களுடன் மறைத்து 3 கிலோ கஞ்சா கடத்தல்; மதுரையில் இருவர் கைது
ADDED : ஆக 03, 2025 04:57 AM

மதுரை : ஆந்திராவில் இருந்து லாரியில் பூக்களுடன் மறைத்து எடுத்து வந்த 3 கிலோ கஞ்சாவை மதுரையில் போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
மதுரை குலமங்கலம் ரோட்டில் லாரி ஒன்றை மதுவிலக்கு போலீசார் சோதனையிட்டனர். டிரைவர் 'சீட்' பின்புறம் பூக்களுடன் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக திருப்புவனம் ஆதீஸ்வரன் 29, துாத்துக்குடி ஒட்டப்பிடாரம் வேல்முருகன் 21 ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான நெல்லை கணேசன் என்ற குமாரை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது: ஆதீஸ்வரன் மீது மணல் திருட்டு, நகை திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் ஆவரங்காடு பகுதி அக்னி குரூப்ஸை சேர்ந்தவர். இந்த குரூப்பில் உள்ளவர்கள் தங்கராஜ் தலைமையில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதீஸ்வரன் லாரி டிரைவராகவும் இருக்கிறார். இவரிடம் கிளீனராக சேர்ந்த வேல்முருகன் கூட்டாளியாக மாறினார். இவர் மீதும் கஞ்சா, அடிதடி வழக்குகள் உள்ளன.
ஆதீஸ்வரன் பள்ளி நண்பர் ரித்தீஷ் மூலம் நெல்லை கணேசன் அறிமுகமானார். இவர் கஞ்சா மொத்த விற்பனையாளர். கணேசன் அறிவுரைப்படி ஆந்திராவில் 5 கிலோ கஞ்சாவை வாங்கிக்கொண்டு ஆதீஸ்வரனின் மைத்துனர் மணிகண்டனின் லாரியில் மதுரை திரும்பினர். வரும் வழியில் 2 கிலோ கஞ்சாவை கணேசன் நண்பருக்கு கொடுத்துள்ளனர். மீதி 3 கிலோ கஞ்சாவுடன் வரும்போது இருவரையும் கைது செய்தோம். இவ்வாறு கூறினர்.

