கடலரிப்பால் கடற்கரை பாதிப்பு; திருச்செந்தூரில் அமைச்சர்கள் ஆய்வு
கடலரிப்பால் கடற்கரை பாதிப்பு; திருச்செந்தூரில் அமைச்சர்கள் ஆய்வு
UPDATED : ஜன 18, 2025 12:57 PM
ADDED : ஜன 18, 2025 06:23 AM

துாத்துக்குடி: கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில் கடற்கரையை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில், சில மாதங்களாக மண் அரிப்பு ஏற்பட்டு, பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை உள்ளது. கோவில் முன், 500 அடி நீளத்திற்கு, 7 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு யாரும் சென்றுவிடாதபடி கரையில் கம்புகளை கட்டி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மண் அரிப்பு பிரச்னையை தடுக்கும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
கடலில், 160 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கவும், 700 மீட்டர் நீளத்திற்கு மணல் கொண்டு செயற்கையாக கடற்கரை உருவாக்கவும் ஐ.ஐ.டி., பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கான நிதியை யார் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக அறநிலையத்துறைக்கும், மீன்வளத்துறைக்கும் பிரச்னை எழுந்துள்ளது.
இதனால், பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து நம் நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக, கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில் கடற்கரையை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
'ஐ.ஐ.டி., வல்லுனர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்ததும் கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் பணிக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''திருச்செந்துார் கடல் அரிப்பு தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் என் தலைமையில், மீன்வளத்துறை அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.