'எல்லா இடத்திலும் ஊடுருவிய கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்'
'எல்லா இடத்திலும் ஊடுருவிய கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்'
ADDED : மார் 03, 2024 09:55 PM

கோவை:''போதை பொருட்கள் கடத்துபவர்களை கண்காணிக்க, தமிழக அரசு தவறி விட்டது,''என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: போதை பொருட்கள், இந்தியாவின் எல்லையில் இருந்து ஊடுருவுகின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும்.போதை பொருட்கள் கடத்திய ஜாபர் சாதிக், புதிய மனிதர் கிடையாது. ஏற்கனவே, 2013ல் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது, சர்வதேச கிரிமினலாக மாறியுள்ளார்.
ஒருமுறை வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டால், போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆனால்,
கண்காணிக்கவில்லை. அவர், டி.ஜி.பி.,யிடம் விருது வாங்கியுள்ளார்; சினிமா கம்பெனி
நடத்துகிறார். தி.மு.க., குடும்பத்திடம் நட்பாக உள்ளார். ஜாபர் சாதிக், எல்லா இடத்திலும் ஊடுருவியுள்ளார்.
முதல்வர், அமைச்சர்கள், உதயநிதி என எல்லாருடனும் புகைப்படம் எடுத்துள்ளார். பள்ளி, கல்வித்துறை, முதல்வர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப் தலைவர்கள் போதை பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசியில் போதை பொருளை ஒழிக்க, ஒரு, 'ஸ்டார்ட் அப் சேலஞ்ச்' நடத்துகிறோம். மார்ச் 7, 8ம் தேதிகளில், மத்திய அமைச்சர் அஷ்வினி தலைமையில் நடக்கிறது. ஸோகோ நிறுவன அதிபர் ஸ்ரீதர் வேம்பு பங்கேற்கிறார்.
லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, 39 தொகுதிகளிலும், பணி செய்து கொண்டிருக்கிறேன். என் விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும்
கட்டுப்படுகிறேன்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
'சீமான் விண்ணப்பிக்கவில்லை'
தேர்தல் சின்னம் தொடர்பாக, சீமான் தெரிவித்த கருத்து குறித்து கேட்ட போது, அண்ணாமலை மேலும் கூறியதாவது: சீமானுக்கு சின்னம் வேண்டுமானால், தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், தகுதியாக இருந்தால் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. புதுப்பிக்க அவர் விண்ணப்பிக்கவில்லை. அண்ணாமலைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. டில்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் முடிவு சரியானது என, தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்காமல் எப்படி சின்னம் கிடைக்கும்? வெள்ளத்தின் போது மறந்து விட்டதாக சீமானே தெரிவித்துள்ளார். அவர் முன்னர், பிரதமர் மோடியை திட்டுவார்; இப்போது அண்ணாமலையை பேச ஆரம்பித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

